பிரபல நடிகர் ஜெக்சன் அண்டனி காலமானார்.

வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் ராகமவில் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 65.

நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் சென்றிருந்த நிலையில், மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் அண்டனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அண்டனி இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் என தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகக் கருதப்படுகிறார்.

நாட்டின் கலாச்சாரத்தை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்ற அவர், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விருதுகளைப் பெற்றுள்ள ஜெக்சன் அண்டனி, தனது அனுபவத்தை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல மிகப்பெரிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெக்சன் அண்டனியின் மறைவு இந்நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.