மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூடு! – மூன்று நாட்களில் 3 மாடுகள் கொலை.

மயிலத்தமடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின் மேலுமொரு மாடு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம், மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கால்நடைப் பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று தினங்களுக்குள் மூன்று கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளன என்றும் பண்ணையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பண்ணையாளர்களின் குடியிருப்புகளும் அண்மையில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களால் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் புத்தர் சிலையும் வைக்கப்பட்டு சட்டவிரோதக் குடியேற்றச் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்றும் வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.