தெருச்சண்டியனாக மாறிய அம்பிட்டிய தேரரைக் கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள்! – மனோ எம்.பி. வலியுறுத்து.

“மட்டக்களப்பு அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகின்றார். இவரை ஒன்றில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

“ஜனாதிபதியைத் தூற்றிய இராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களைக் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பகிரங்கமாகக் கொலைவெறிக் கூச்சல் எழுப்பும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா எனக் கேட்க விரும்புகின்றேன். எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்கக் கூடாது” – என்றும் மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிஸில் புகார் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதைக் கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரைக் கடிதம் மூலம் கோர வேண்டும். அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெறச் செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரிக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும், மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரைக் கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னைத் தூற்றிய ராஜாங்கன தேரரைக் கைது செய்தார். இன்று தமிழ் மக்களைக் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பகிரங்கமாகக் கூறும் இவரைக் கைது செய்ய மாட்டாரா எனக் கேட்க விரும்புகின்றேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழி மாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத் திமிருடன் கூறும் இந்தத் தேரரை ஜனாதிபதி கைது செய்ய மாட்டாரா எனக் கேட்க விரும்புகின்றேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரைக் கைது செய்ய முடியுமானால், ஏன் இவரைக் கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுக்களை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமன ரத்ன தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை இராணுவம் உதவுகின்றது. நாட்டின் இராணுவம் இவருக்குச் சோறாக்கி சாப்பாடு போடுகின்றது. இவை பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாகப் பேசி வருகின்றார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கின்றார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையைப் பிடிக்கின்றார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியைத் தட்டி விடுகின்றார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கின்றார். அரச அதிகாரிகளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார். அப்படியானால், இவர் யார்?” – என்று கேள்வி எழுப்பினார் மனோ கணேசன் எம்.பி.

Leave A Reply

Your email address will not be published.