தமிழரின் உணர்வெழுச்சியை அரசால் அடக்கவே முடியாது! – நாடாளுமன்றில் சாணக்கியன் சூளுரை.

“அரசும், பொலிஸாரும், படையினரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழர்களை முடக்கப் பார்க்கின்றார்கள். தமிழர்களின் உணர்வெழுச்சியை அவர்களால் அடக்க முடியாது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் நேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் உப தலைவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டார்.

அரசும், பொலிஸாரும், படையினரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக எமது இனத்தை முடக்கப் பார்க்கின்றார்கள். எமது இனத்துக்காக – இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லங்களைத் தரைமட்டமாக்க முயலும் அரச தரப்பினரும், இனவாதிகளும் எம்மவர்களின் கல்லறைகளைப் பார்த்து இன்றளவிலும் பயப்படுவது ஏன்? தமிழர்களின் உணர்வெழுச்சியை அவர்களால் அடக்க முடியாது.

மாவீரர்களின் சாபத்தைக் கோட்டாபய அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்தக் கார்த்திகை மாதம் எம்மவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாதமாகும். அஞ்சலி செலுத்துவதற்குக் கூட இந்த நாட்டில் எமது இனத்துக்கு உரிமை இல்லையா?” – என்று கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.