நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைவோம் – புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த ஜனாதிபதி தெரிவிப்பு.

2024 ஆம் ஆண்டில் நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி, புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின்னர், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை எழுத்துக்கொண்டனர்.

தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு 2024 ஆம் ஆண்டில் நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு நம்பிக்கையான மனப்பான்மையுடனும் உறுதியுடனும் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரமானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.