ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வவுனியாவில் 5 பேருக்குத் தடை உத்தரவு!

வடக்குக்கு இன்று விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளை வவுனியா செல்லவுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய 5 பேருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று வவுனியா பொலிஸார், வவுனியா நீதிமன்றில் தோன்றி முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி நாளை அரச கடமைகளில் ஒன்றான மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியாவுக்கு வருகை தரவுள்ளார். அந்தக் கூட்டத்தில் அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்படுத்தி, வீதியை மறித்து அல்லது அப்பகுதியை மறித்து குழப்பும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடவுள்ளனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த 5 பேருக்கு எதிராகவும், அவர்களது அமைப்புக்களுக்கு எதிராகவும் பொலிஸார் தடை உத்தரவு கோரியிருந்தனர். அதனைக் கவனத்தில் எடுத்த மன்றும் குறித்த 5 பேருக்கு எதிராகவும் 03.01.2024 இரவு 12 மணி முதல் 05.01.2024 இரவு 12 மணி வரை தடை உத்தரவு விடுத்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தடை உத்தரவானது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களைச் சேர்ந்த கோ.ராஜ்குமார், கா.ஜெயவனிதா, ஜெனிற்றா, சரோஜினிதேவி மற்றும் முன்னாள் முன்னாள் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.