வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை அடக்கம்!

வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

ஹிமாசல மாநிலம் கஷாங் நாலா அருகே கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் சென்ற கார், சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடந்த எட்டு நாள்களாக, வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45) கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹிமாசல பிரதேசத்துக்கு தனது நண்பா் கோபிநாத் என்பவருடன் சென்றாா். பிப்.4-ஆம் தேதி, ஹிமாசல மாநிலத்தில் உள்ள கஷாங் நாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காா் ஓட்டுநா் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஆனால் வெற்றி துரைசாமியைக் கண்டறிய முடியவில்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்த கறை, திசுக்களை சேகரித்த போலீஸாா், அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, மரபணு முடிவுகள் ஹிமாசல பிரதேசத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிவித்தன.

இந்த நிலையில்தான், வெற்றி துரைசாமியின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.

இதையடுத்து, வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை தியாகராய நகர் மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.