பாரிய எழுச்சி பெறுகின்றது அநுரவின் தேசிய மக்கள் சக்தி! – பொன்சேகா சுட்டிக்காட்டு.

“நாட்டில் கட்சிசாரா வாக்குகளில் (மிதக்கும் வாக்குகள்) 30 வீதம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்குச் சென்றடைந்துள்ளது. இது பாரிய மாற்றமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜே.வி.பியில் முன்னர் ஐந்து இலட்சம் பேர் இருந்தாலும் அக்கட்சியில் ஒழுக்கக் கட்டுப்பாடு இருந்தது. கூட்டங்களின்போது கூட இராணுவக் கட்டமைப்பு போல் ஒழுக்கம் பேணப்பட்டு வந்தது. ஆனால், ஜே.வி.பி. தற்போது தேசிய மக்கள் சக்தியாகியுள்ளது. அந்தக் கூட்டணியில் இணைபவர்கள் எல்லாம் முன்னைய ஜே.வி.பியினர் போல் செயற்படுவார்கள் எனக் கூற முடியாது.

மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்திக்கு வருவதற்கு வெட்கப்பட்டவர்கள் கூட தேசிய மக்கள் சக்திக்குள் சென்றுள்ளனர்.

மிதக்கும் வாக்குகளில் 30 வீதம் அவர்களுக்குச் (தேசிய மக்கள் சக்திக்கு) சென்றுள்ளது. இளைஞர்களின் வாக்குகளிலும் சிறு வீதம் சென்றுள்ளது. முன்னர் 5 இலட்சம் என்றால் தற்போது 20 இலட்சம். இது பாரிய மாற்றம் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். மறுபுறத்தில் அன்றைய ஜே.வி.பியில் இருந்த ஒழுக்கத்தை இன்று பேண முடியாது.

நாட்டை ஆள்வதென்பதும் நகைப்புக்குரிய காரணம் அல்ல. அதற்கு அனுபவம் இருக்க வேண்டும். அந்த இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி வந்துள்ளதா என்பது பிரச்சினையாகும்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.