யாழ். நகரில் மோட்டார் சைக்கிளைத் திருடி தீக்கிரையாக்கிய நபரைத் தேடும் பொலிஸ்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நகர் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் கடையின் முன்பாக அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் அந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது..

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.