பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு! (Photos)

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 400 கோடி ரூபா செலவில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடங்கள், குருதி சுத்திகரிப்புப் பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படும் நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது ‘ஏ’ தர ஆதார வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.

ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாகக் காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் ஊடாக பலர் நன்மையடையவுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளைச் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.