‘கே.டி (எ) கருப்பு துரை’ – தமிழ்த் திரைப்படம் குறித்த ஒரு பார்வை – ஜோ

மகன்களால் கொல்லப்பட இருக்கயில் வீட்டைவிட்டு தப்பித்து வெளியேறும் , கறுப்புத்துரை என்ற 80 வயது தாத்தா, பிறந்த போதே அனாதையாக புறக்கணிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வளரும் குட்டி என்ற 8 வயது சிறுவன்.  இருவருக்குமான உணர்வு பூர்வமான உறவைப்பற்றி சொல்லிய திரைப்படம்தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’. இத்திரைப்படத்தில் இந்த இருவருமே நாம் சந்திக்கும் இரு கதாப்பாத்திரங்களாகும்.

‘கே.டி (எ) கருப்பு துரை’ ( K.D. (a) Karuppu Durai) தாத்தா மதுரைப்பக்கம் இருந்து தப்பித்து தென்காசி, செங்கோட்டை வந்தடைகிறார். அங்குள்ள ஒரு கோயிலில் தஞ்சமடைகிறார். அங்கு தான் கரடுமுரடாக வளர்ந்து வரும் குட்டியும், கறுப்பு துரையும் சந்திக்கின்றனர். சிறுவனின் துடுக்குத்தனமான பேச்சில் கறுப்புத்துரை ஆள்கொள்ளப்பட்டாலும் சிறுவனின் அடாவடிப்பேச்சை ஆச்சரியத்தோடும் சற்று  அச்சத்தோடும் பின்பு ரசிக்கவும் ஆரம்பிக்கிறார்.

இருவரும் ஒரு குடிசையில் சேர்ந்து வசிக்க வேண்டிய சூழல் எழுகிறது. இவர்களோடு கூத்து கலைஞரான கோழிக்கடைக்காரின் நட்பு உருவாகிறது. பின்னர் இவர்கள் கூத்து பார்க்க சிவகிரி போவதும், குற்றாலம் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதும், தாத்தாவின் 10 விருப்பம் எது என கேட்டு எழுதி வைத்து விட்டு, ஒவ்வொரு விருப்பமாக செய்து வைக்கும் சிறுவனின் கரிசனை என, இப்படியாக கதை சுவாரசியமாக நகர்கிறது.

இரு தலைமுறையின் மனநிலை, ஒரே சூழலில் இரு தலைமுறையும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என அங்கே காண முடிகிறது.  சமகால சமூக சூழல், குழந்தைகளின் மனநிலையின் பார்வையுடன் கதை சொல்லப்படுகிறது.  ஒரு இடத்தில், தாத்தா “நீ குழந்தையா, இல்லை நான் குழந்தையா எனத் தெரியவில்லையே “  என்று கேட்பார். குழந்தைகளுடன் நட்பாக பழுகுகிறவர்கள் அதிகமாக உணர்வதும் இதுவே.

பெரியவரை விட பிரச்சினைகளை கையாளுவதில் குட்டி துடுக்காக இருக்கிறான். தாத்தாவிற்கு தன் பால்ய கால சிநேகிதியை காண வேண்டும் என ஆசை துளிர்கிறது. அதிலிருந்து சுவாரசியமான நிகழ்வுகள் ஆரம்பமாவதோடு, வயதாகும் மனிதர்கள் தங்கள் பால்ய காலத்திற்குள் நுழையும் விருப்பம் ஆகியவற்றை நினைவு படுத்தி  இதை எல்லாம் கவனமாக அவதானித்து திரைக்கதையில் எழுதப்பட்ட விதமும் , அதை காட்சி மொழியாக பகிர்வது சிறப்பு.

பெற்றவர்கள் முதியவர்கள் ஆகி விட்டார்கள் என்ற காரணத்தால் , வயதானவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்குதல் கூடாது என்பதை இப்படம் சொல்ல முயன்றுள்ளது.

வயதானவர்களை கொலை செய்யும் அதிகாரம் பிள்ளைகளுக்கு இல்லை.  இவர்களிடம் இருந்தே  மனித வாழ்வியிலுக்கான விழுமியங்கள், கிராம விவசாயம், விவசாயத்திற்கான நுணுக்கங்களை கற்று கொள்கின்றனர். வயதானவர்கள் , இளையவர்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கும், வயதானவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு, இளையவர்களின் பங்கும், அதன் தேவையும் பற்றி சொல்கிறது ‘கே.டி (எ) கருப்பு துரை’ .

இப்படியான ஒரு உறவு வளரும் போது, சிறுவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கறுப்பதுரைக்கு சிறுவனை பிரிய மனமில்லை என்பதால் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லாது கருப்புதுரை தவிக்கிறார்.  ஒரு பக்கம் சிறுவனை சென்னைக்கு அனுப்ப கோயில் நிர்வாகத்தார் தேடிக் கொண்டிருக்கின்றனர்.  அதே நேரம் சொத்தில் கையெழுத்து வாங்குவதற்கு என கூலிக்கு ஆள் வைத்து முதியவரை, அவர்களது மகன்களும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெரியவரும் சிறுவனும் பிரிகையில் , அவர்களது பெரும் துயர் , திரைப்படத்தைக் காண்பவர்களையும் பற்றிக் கொள்கிறது.  யாரும் இல்லை என இருந்தவர்கள், அன்பால் தங்களுக்குள் ஒருவராக மாறியதும், அங்கு இரத்த உறவை விட அழகான நேசம் கொண்ட உறவு ஒன்று மலர்ந்தது நம்மை நெகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

ஒரு வழியாக மகன்கள், முதியவரை பிடித்து வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள் .  உணர்வுப் பெருக்கான உரையாடல்களை நம்பாது, உங்களுக்கு என்ன தேவை சொத்துத்தானே என , கையெழுத்து போட்டு தருகிறேன் என்பார். கையெழுத்து வாங்கின பின்பு முதியவரை வைத்து பார்த்துக்கொள்வார்கள் என்றால், அப்போதும் கொலை செய்யத் தான் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதை அறிந்த முதியவர் தப்பித்து வீட்டைவிட்டு போய் விடுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறினாலும் அழகான வாழ்க்கை வெளியிலும் உண்டு என முதியவர்களுக்கும் நம்பிக்கையூட்டிய திரைப்படம் இது.

உறவுச் சிக்கலில் வீட்டில் அல்லல்ப்படும் முதியவர்களை பாராமரித்து பார்க்க வேண்டியது , சமூகத்தின் தேவை என்கிறது கதை. முதியவர்களுக்கு  தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என உணரவைத்த திரைப்படம் இது.

திருநெல்வேலியின் நகர்புறங்களை பல திரைப்படங்களில் கண்ட கண்களுக்கு, திருநெல்வேலியின் முதுகெலும்பான கிராமங்கள், திருநெல்வேலியின் அடையாளமான திருவிழாக்கள், கோயில்கள், கொண்டாட்டங்கள், விவசாய வயல்கள் என கிராமத்தின் அழகை  படம் பிடித்து காட்டிய அருமையான திரைப்படம் இது.

இது போன்ற படங்கள் தான் சமூகத்திற்கு தேவை. பாரம் போன்ற திரைப்படங்கள் வீட்டிலுள்ள ‘முதியவர்கள் கொலை செய்யப்படுவது’ பற்றிய கதையை மட்டும் சொல்லிய போதும் முதியவர்களுக்கும் ஒரு  வாழ்க்கை உண்டு, முதியவர்கள் தங்கள் மனநிலை எப்படியாக வகுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைத்த திரைப்படம் இதுவாகும்.  உறவுகள் என்பது இரத்த பந்ததால் மட்டுமல்ல, அன்பாலும், நேசத்தாலும் புது உறவுகளை மலரச் செய்ய இயலும் எனக்கூறிய இத் திரைப்படம் மனிதநேயத்தை சொல்லிச் செல்கிறது.

 

பல விருதுகள் பெற்றுள்ளது இத் திரைப்படம். இதன் இயக்குனர் சென்னையை பிறப்பிடமாக கொண்டு, சிங்கப்பூரை வாழ்விடமாக கொண்ட மதுமிதா என்ற பெண் என்பது மேலும் சிறப்பு. இது இவருடைய நாலாவது படமாகும்.

சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை  Asian American International Film Festival மற்றும் Jagran Film Festival ல்  இருந்து நாக விஷால் பெற்றுள்ளார்.  UK Asian Film Festival மற்றும் Indian Film Festival of Cincinnati ல் இருந்து மதுமிதா சிறந்த இயக்குனர் என்ற விருதை பெற்றுள்ளார்.  Singapore South Asian Film Festival ல் சிறந்தத் திரைப்படம் என்ற விருது பெற்றுள்ளது.  New York Indian Film Festival சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திர விருதிற்கு தேர்வாகியுள்ளது.


கறுப்புதுரை கதாபபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல நாடக செயல்பாட்டாளரும், நாடகத்துறை பேராசிரியருமான மு.ராமசாமி என்பதும் சிறப்பு. கறுப்பு துரையாக நடித்த பேராசிரியர் ராமசாமியின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவிற்கு கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.

படத்தின் கதைக்கு ஏற்ற முறையில் கார்த்திகேய மூர்த்தியால் பிண்ணனி இசை இசைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு மெய்யீந்திரன் மற்றும் கெம்புராஜ். நவம்பர் 2019ல் வெளியான சிறந்த தமிழ்ப்படங்களில் இத்திரைக் காவியமும் ஒன்று.

– ஜோ

Leave A Reply

Your email address will not be published.