குடாநாட்டில் சமூகத் தொற்று இல்லை; மக்கள் அச்சமடையத் தேவையில்லை. பணிப்பாளர்.

குடாநாட்டில் சமூகத் தொற்று இல்லை; மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புங்குடுதீவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்ட பெண் பயணித்த பஸ்ஸின் நடத்துநருக்கும் கொரோனாத் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் மக்கள் சமூகத்தொற்று  என குழப்பமடையத் தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே புங்குடுதீவு பெண்ணுக்குக் கொரோத் தொற்று உறுதி செய்யப்பட்டவுடனேயே  அவருடன் பயணித்த அல்லது அவருடன் பழகிய அனைவரையும் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கியுள்ளோம். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்த ஒருவருக்கே  கொரோனாத் தொற்று  உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளார்கள. எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. எனினும், கொரோனாத் தொற்று ஏற்படுவதைத்  தடுப்பதற்குப் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.