பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தையிட்டியில் தொடரும் போராட்டம் – தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
யாழ். தையிட்டியில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அந்தப் பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பொசன் போயா தினமான இன்றும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்ட இடத்துக்குச் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை முதல் அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டாலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு தென்னிலங்கையில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






