ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்பு!
ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹிமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இச்சம்பவத்தின்போது சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அவர்களைத் தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நீர் மின் திட்ட இடத்திலிருந்து இதுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாயமான மூன்று பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திட்ட இடத்திற்கு அருகிலுள்ள காட்டில் இருந்து தேடுதல் குழுக்கள் மீட்ட சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த லவ்லி, முகாமில் 13 பேர் இருந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் மலைகளை நோக்கி ஓடியதாகவும், மீதமுள்ளவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.
வெள்ளம் வருவதை நாங்கள் கண்டோம், கீழே உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்ய கத்தினோம், பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு ஓடினோம் என்று தொழிலாளி தயா கிஷன் தெரிவித்தார்.
இதனிடையே மழை காரணமாக திட்டப் பணிகள் உடனே நிறுத்தப்பட்டன. திட்டப் பணியிலிருந்து அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படும் மக்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
