பாதாளக் குழு உறுப்பினர் ‘குடு சலிந்து’வின் இரு சகாக்கள் போதைப்பொருளுடன் கைது!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரின் சகாக்கள் இருவர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகமை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணும், தியகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 301 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 250 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆணிடமிருந்து 25 கிராம் 740 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் ‘குடு சலிந்து’ என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.