மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிப்பு!
மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் இந்திய மீனவர்கள் 30 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் அந்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த மீனவர்களின் விசாரணை நேற்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது அந்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்குப் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டுக்காக தலா 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டது.
படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிவான் உத்தரவிட்டார்.
