சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மனமுடைந்து தற்கொலை
ஆன்லைன் வேலை என்று கூறிய மோசடியில் சிக்கிய பெண், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பெத்வா நதிக்கரையில் சில நாள்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.
ஜான்சி மாவட்டம் பர்வா சாகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் பாவ்னா பால். இவர் காணாமல் போனதையடுத்து அவரது கணவர் ஷேர் சிங், காவல்துறையில் புகார் அளித்தார். பாவ்னா வழக்கமாக கோவிலுக்குச் செல்லும்போது ஒரு குவளையில் தண்ணீருடன் வீட்டை விட்டுச் சென்ற நிலையில் திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் செல்லும் வழியைக் கண்டறிந்து இறுதியாக ஆற்றின் கரையில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவர் கடுமையான மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டது. தெரியவந்தது.
பாவ்னா, பணம் சம்பாதிக்க வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது ‘அதிக ஊதியத்துடன் வீட்டிலிருந்து வேலை என பென்சில் நிறுவனத்தின் பேக்கேஜிங் வேலை குறித்த ஆன்லைன் விளம்பரத்தைக் கண்டார். வேலையைப் பதிவு செய்வதற்காக அவரிடம் ரூ. 35,000 பணம் செலுத்துமாறு கேட்கவே அவரும் நம்பி பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர்கள் பாவ்னாவைத் தொடர்புகொள்ளவில்லை. அவர்களது தொலைபேசி எண்ணும் செயலில் இல்லை. இதன்பின்னரே அது போலி விளம்பரம் என்று பாவ்னாவுக்குத் தெரிய வந்தது.
பணத்தை இழந்ததால் மனமுடைந்த பாவ்னா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
2023ல் திருமணம் செய்துகொண்ட பாவ்னாவுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறார். மோசடிக்கு ஆளான பாவ்னா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கினால் தவறான முடிவுகளை எடுக்க வேண்டும். சைபர் குற்றப்பிரிவில் உடனடியாக புகார் அளித்தால் உங்கள் பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. புகார் அளிக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் வேறு யாரேனும் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் தவிர்க்கலாம்.
