“பேரிடரை எதிர்கொள்ளல்: நல்லூரில் வெள்ளம்:” – யாழ். பல்கலைக்கழகத்தில் கருத்தமர்வு.
யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் ஏற்பாட்டில் “பேரிடரை எதிர்கொள்ளல்: நல்லூரில் வெள்ளம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த கருத்தமர்வு நேற்று யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்க சமூக விஞ்ஞானப் பிரிவின் தலைவர் திருமதி மைதிலி ரவீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தமர்வில் “பருவநிலை மாற்றமும் வெள்ளப்பெருக்கும்” என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கருப்பொருளுரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் “மௌனம் கலைதல்” என்ற செயல் விளக்க நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.
அத்துடன் பல்கலக்கழக கல்வியாளர்களும், துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்ட குழுநிலைக் கருத்தமர்வும் இடம்பெற்றது.
இதில் யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணபதி கஜபதி, புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.அன்ரனிராஜன், கலாநிதி பிரதீபா விபுலன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்குக்கான உதவிப் பொது முகாமையாளர் ஏந்திரி. ஏகாம்பரநாதன் ஜெகதீசன், யாழ். மாநகர சபையின் தலைமைப் பொறியியலாளர் ஏந்திரி இராசையா சுரேஷ்குமார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏந்திரி. குணராஜ் சுஜீவன் மற்றும் நல்லூர் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இராமலிங்கம் சிவகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



