இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு மிக விரைவாக நிரந்தர தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமர் ஹரிணி வலியுறுத்து.

“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிரந்தரமாக நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகள் இந்தச் செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது, ‘Rebuilding Sri Lanka’ செயலணியின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு இதுவரை கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் மற்றும் செயலணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் கிடைக்கப்பெறும் என இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.

தற்போதும் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிக விரைவாக நிரந்தர தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருப்பது நீண்டகாலப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இணைந்திருந்ததுடன், அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு உள்ளிட்டோர் மற்றும் குழுவின் சக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.