புளியங்குளத்தில் கோர விபத்து! ஒருவர் பலி; இருவர் படுகாயம்!!
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

முல்லைத்தீவிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் சைக்கிளில் பயணித்தவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே விபத்தில் பலியானவராவார்.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
