மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை.

முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி , தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள்சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினரால் 23.11.2020 நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் அன்றைய தினமே இடம்பெற்றிருந்தன.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், புரந்திரன் எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா, திருமதி துஷ்யந்தி சிவகுமார், ஹாரிஸ், உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை 25.11.2020 புதன் கிழமைக்கு தவணையிட்டிருந்தார்.

இந்நிலையில் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வருகைதந்த சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ர சட்டத்தரணிகள் மூவர் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் குறித்த ஆறு வழக்குகளையும் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டு நேற்று (24.11.2020) திறந்த நீதிமன்றிலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது, தடையுத்தரவு நீடிக்கப்பட வேண்டும் என்ற தமது தரப்பு நியாயங்களை தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்குகளின் கட்டளையை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி புதன்கிழமை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்கள் வழங்கவுள்ள கட்டளையினை எதிர்பார்த்து இருதரப்பினரும் 25.11.2020 புதன் இன்று மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அந்தவகையில் இன்றைய தினம் நீதிமன்றால் தடைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழ் ஆர்வலர்களானதம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலா, பேதுறுப்பிள்ளை ஜெபநேசன், அன்ரனிஜெகநாதன் பீற்ரர் இளஞ்செளியன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை எதிர்த்தரப்பில் தடையுத்தரவினைக்கோரிய போலீஸ் நிலையங்கள் சார்பில் போலீஸ் அதிகாரிகளும் மன்றிலே ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30.11.2020 ஆம் திகதிவரையில் நீடிப்பதாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடையுத்தரவு வழங்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ருஜிக்கா நித்தியானந்தராசா கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் குற்றவியல் சட்டக்கோவை 106இன் படி தடையுத்தரவு வழங்கப்பட்டோர்மீது போலீசாரால் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருப்பதனால், குறித்த தடைக்கட்டளை தொடர்ந்தும் நீடிக்கப்படவேண்டும் எனச் சொல்லப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதிவரையில் குறித்த தடைக்கட்டளை நீடிக்குமென நீதிமன்று கட்டளையிட்டுள்ளது – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.