சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் கொழும்பில் ஜெனிவா குறித்து நேரில் பேச்சு – வவுனியாக் கூட்டத்தில் தீர்மானம்

ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் சில தினங்களில் கூடிப் பேசுவதற்கு இன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

ஜெனிவா விவகாரங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று மதியம் தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழர் தரப்பு ஜெனிவா விவகாரத்தைக் கையாள்வதற்கான முறைமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சில தினங்களில் கூடி ஆராய்வர் என முடிவு செய்யப்பட்டது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.