இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து : கோட்டா அரசுக்கு கரு எச்சரிக்கை

“புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.

நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.