தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – சுமந்திரன்

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – சுமந்திரன்

விதுர விக்கிரமநாயக்க ,அவரின் கூட்டாளிகளுக்கெதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்புறு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 30.01.2021 இன்று வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களையும் கையளித்திருந்தனர்

குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரிலே சென்று பார்வையிட்ட பின்பு ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 29.01.2021 நேற்றைய தினம் போலீசாரோடு குருந்தூர்மலைக்குப்போய் உடைக்கப்பட்ட தடையங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்திருந்தார்.

ஆகையினாலே அங்கே இருந்தது உடைக்கப்பட்டதென்பது ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலே, அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்திலே வழக்கொன்றை நாங்கள் தாக்கல்செய்யவுள்ளோம்.

ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினாலே கொடுக்கப்பட்ட உத்தரவினை மீறி, அந்த உத்தரவிற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக, அந்த நீதிமன்ற உத்தரவினை மீறியதற்காக, நீதிமன்றினை அவமதித்த வழக்கொன்றும் மேன்முறையிட்டு நீதிமன்றிலே நாங்கள் உடனடியாகத் தாக்கல் செய்வோம்.

அது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் எதிராக அந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.