நாடு பூராகவும் போராட்டம் நடத்த ஜே.வி.பியும் அதிரடித் தீர்மானம்!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது.

தமது போராட்டத்தின் ஆரம்பகட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி தமது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் அரசின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்புத் துறைமுகம் என்பது இலங்கை பொருளாதாரத்தின் இதயத்தை போன்றது. ஏற்கனவே இந்தத் துறைமுகத்தின் சில பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.