மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்! மாவட்ட அமைப்பாளர்களுக்கு ஐ.தே.க. கோரிக்கை.

தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இருந்து அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் மின் அஞ்சல் ஊடாகவும் தொலைபேசி வாயிலாகவும் மேற்படி பணிப்புரை ருவான் விஜேவர்தனவால் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான அவசர கடிதங்களும் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று ஸ்ரீகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜூன் மாத பகுதியில் நாடளாவிய ரீதியில் ஒரே சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், கட்சிக் கிளைகளின் புனரமைப்புப் பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறும் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறும் பொருத்தமான வேட்பாளர்களை தயார் படுத்துமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வகிபாகம் குறித்து தற்போது பெரிதாக மக்களால் சிந்திக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் எவரும் பிரவேசிக்கமுடியாத நிலையில், தற்போது அதன் பாரதூரத் தன்மையையும் அவசியத்தையும் அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்குமாறும் அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தமது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை காலதாமதமின்றி கட்சி தலைமையகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தமது விண்ணப்பங்களை பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி,இல.400. பிட்ட கோட்டை, கோட்டை.எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், இது தொடர்பில் 0112878123 மற்றும் 0777238659 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.