யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையற்ற வருகையைத் தவிருங்கள் – மக்களிடம் நிர்வாகம் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் நிர்வாகம் கேட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இருவர், தாதியர்கள் மூவர் உட்பட நி்ந்தரப் பணியாளர்கள் 9 பேரும், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர் என 13 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உயர்மட்டக் கூட்டம் இன்றிரவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேற்படி வலியுறுத்தினார்.

“போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும்.

கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்.

போதனா வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.