கோட்டாவுக்கு எதிராகத் தென்னிலங்கையில் போர்க்கொடி

கொலை அச்சுறுத்தல் விடுத்த கோட்டாவுக்கு
எதிராகத் தென்னிலங்கையில் போர்க்கொடி

– ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்தும் மேர்வின் சில்வா

“நல்லாட்சி அரசில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது அது சட்டத்துக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஸ ஆவார். அவ்வாறான நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடப்படுவது பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும். செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்சக்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் , தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“1994 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச செயற்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வேட்புமனுத் தாக்கல் செய்யாமலிருந்தபோது இவரே போராடி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது , நல்லாட்சி அரசில் நீதி அமைச்சராகச் செயற்பட்டு அதனை விஜயதாஸ ராஜபக்சவே தடுத்தார். ‘இது சட்டத்துக்கு முரணான செயலாகும். நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை இதற்கு இடமளிக்கமாட்டேன்’ என்று விஜயதாஸ பகிரங்கமாகக் கூறினார்.

சிறைவாசத்திலிருந்து பாதுகாத்த நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமற்றது. ஜனாதிபதியொருவர் பேசக் கூடிய முறைமையிலிருந்து விலகி தரமற்ற வகையில் விஜயதாஸவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்சக்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதி என்ற பதவியின் கௌரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இராணுவத்திலும் நீங்கள் உயர் பதவி வகிக்கவில்லை. கேர்ணலாக மாத்திரமே செயற்பட்டீர்கள். ஒழுக்க விழுமியங்கள், முக்கியத்துவம், பொறுப்பு, அச்சமற்ற நிலை இன்றும் இராணுவத்துக்கு உள்ளது. ஜனாதிபதி பதவியும் தற்காலிகமானது என்பதை மறந்து விட வேண்டாம். மனிதாபிமானமே நிரந்தரமானது. எனவே, தயவு செய்து இவ்வாறான நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு ஹிட்லரைப் போன்று செயற்படுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிட்லரைப் பற்றி வரலாற்றில் கூட எழுத முடியாது. ஹிட்லருக்கு என்ன ஆயிற்று என்பதை அவரும் அறியவில்லை, அவரைச் சார்ந்தோரும் அறியவில்லை. எனவே, ஒரு மனிதனாகச் செயற்படுங்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.