யாழில் 3 பொலிஸார் உட்பட மேலும் 12 பேருக்குக் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் 636 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே, 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கைதடி அரச திணைக்களம் ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர் நேற்று தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

அத்துடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.