கொரோனாவின் தீவிரத்தால் மீண்டும் வீட்டிலிருந்து வேலை – ஆராய்கின்றது அரசு.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை அறிவிப்பது தொடர்பாக அரசு ஆராய்கின்றது.

அரச நிறுவனங்களின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது எனப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கும் அரச சேவையை வினைத்திறன் மிக்க முறையில் கொண்டு செல்வதற்கும் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படுகின்றது என அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அரச அலுவலகங்களுக்கு 50 வீதமான ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வருவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

ஏனையோர் வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.