மேல் மாகாணத்துக்கு வெளியிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு.

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேல் மாகாணத்துக்கு வெளியிலும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேல் மாகாண மக்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன எனவும், இதனைத் தொடர்ந்து கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதன்படி குறித்த மாவட்டங்களில் கொரோனாத் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரையில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 9 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அஸ்ரா செனகா தடுப்பூசியும், மற்றையவர்களுக்குச் சீனாவால் வழங்கப்பட்டட சீனோபார்ம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அஸ்ரா செனகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் மூன்று இலட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், மிகுதி 6 இலட்சம் பேர் வரையிலானோருக்குச் செலுத்துவதற்கு அதே வகை தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் வேறு வகை தடுப்பூசியைச் செலுத்துவதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.