எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாகப் பூட்டு! சஜித்துடன் தொடர்பைப் பேணிய எம்.பி.க்கள் தனிமைப்படுத்தலில்..

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதன் பின் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாடாளுமன்ற சி.சி.ரி.வி. காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதற்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பைப் பேணிய 10 முதல் 15 வரையான எம்.பி.க்களும் நாடாளுமன்ற ஊழியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தனது ருவிட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாஸ நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.