மீன்களில் நஞ்சுப் பொருள் உள்ளதா? – இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறது கடற்றொழில் திணைக்களம்.

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்துக் காரணமாக பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களில் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சுப் பொருட்கள் இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பல் தீ விபத்தால் பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மீன்களைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதில் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நஞ்சுப் பொருட்களும் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அந்தப் பகுதிகளில் இருந்து மீன்கள் சந்தைக்கு வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், குறித்த பகுதியில் வசிப்பவர்களுக்குப் பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நடமாடும் வியாபாரிகள் ஊடாக மீன் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்து காரணமாக இலங்கையின் மீன்வளம் மற்றும் கடல் சார் சூழலுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.