அடித்து விரட்டினாலும் அடிவாங்கியேனும் பணிகளைத் திறம்படச் செய்ய வேண்டும்!

“மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும் சமாளித்துக்கொண்டு உங்கள் பணிகளைத் திறம்படச் செய்ய வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

சேதன உரப் பாவனையை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் நலனைக் கருத்திக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நச்சுப் பொருட்கள் அற்ற உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமை, அரசின் கொள்கைத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார்.

சேதன உரப் பாவனையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்துக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் உரத் தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்றாலும், அடுத்த போகம் வரை போதியளவு உரம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரசாயன உரத்தை தடை செய்வது முழு உலகுக்கும் நன்மை தரும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சேதன உரம் தொடர்பில் விவசாயிகள் தெளிவுபடுத்தப்படாமை, தேவையற்ற பயத்துக்குக் காரணமாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.