இலங்கைக் கடலில் சட்டவிரோதமாக நுழையவில்லை ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ – அரசு தெரிவிப்பு.

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கைக் கடற்பரப்பில் நுழையவில்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அத்தோடு, மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

“குறித்த கப்பல் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பல்.

தீப்பிடித்த இந்தக் கப்பல் சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும்.

மே 17ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்குப் பின்னர் வந்தது.

இதில் 1,466 கொள்கலன்கள் இருந்தன. அதில் 513 கொள்கலன்கள் இலங்கையில் இறக்க வேண்டியவையாகும். ஆகவே, இது ஒரு இரகசியக் கப்பல் என எவரும் கூற முடியாது.

அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளானதை அறிந்து கொண்டவுடன் இலங்கைக் கடல் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலில் எதுவிதமான இரசாயனங்களும் கலக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கடலில் கலக்கப்பட்ட கழிவுகளை நாம் முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எமது கடல் பரப்பை முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுவோம். அதேபோல் நட்டஈடு எடுக்கப்படும். ஆனால், அது உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது.

எனினும், இடைக்கால நட்டஈடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.