113 ஆசனங்களைப் பெற்று சஜித்தை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பு : முஜிபுர் ரஹ்மான்

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

“தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டங்களையும் தேர்தல் சட்டங்களையும் மீறியேனும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார். அதன் காரணமாகவே அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரமாகச் செயற்படும் அரசு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரச ஊடகங்கள் அரசுக்குப் பக்கசார்பாகசு செயற்படுகின்றன என்று தெரிவித்து அது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரச ஊடகங்கள் அரசின் தேர்தல் பிரசாரக் கூடங்கள் போன்று பக்கச்சார்பாகச் செயற்படுகின்றன. அந்த ஊடகங்களில் ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படும் நேரம் மிகக் குறைவாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இம்முறை ஆணைக்குழு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.

எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆணையாளரிடம் வலியுறுத்தினோம். இது வரி செலுத்துகின்ற மக்களின் உரிமையாகும். இவ்வாறிருக்கையில் அரச ஊடகங்கள் தமக்குத் தேவையான செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புவது தவறாகும். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கவலை தெரிவித்தார்.

தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரமாக செயற்படும் அரசு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வாறாக கீழ்மட்டமான செயற்பாடுகளையும் செய்வதற்கு இந்த அரசு தயாராகவுள்ளது. இவ்வாறான அரசுடனேயே நாமும் ஆணைக்குழுவும் செயலாற்ற வேண்டியுள்ளது. எனவேதான் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை நாம் வலியுறுத்துகின்றோம்.

தனிமைப்படுத்தல் கட்டளை சட்டங்கள் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டங்களிலும் இவை பின்பற்றப்படவில்லை. சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை வர்த்தமானிப்படுத்தினால் அதனை தாமும் பின்பற்ற வேண்டியேற்படும் என்பதால்தான் அதனை அரச தரப்பினர் காலம் தாழ்த்துகின்றனர். தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தையும் தேர்தல் சட்டத்தையும் மீறியேனும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகவுள்ளது.

கடந்த அரசிலிருந்து சிரேஷ்ட தலைவர்கள் சிலர் ராஜபக்சக்களுடன் இரகசியப் பேச்சில் ஈடுபட்டமையினாலேயே அவர்களது ஊழல், மோசடிகள் மறைக்கப்பட்டன. அதுவே அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற ஏதுவாக அமைந்தது. கடந்த அரசில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டிருந்தது. அரசில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு எதிராக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவ்வாறு இல்லை. எவ்வாறிருப்பினும் இவற்றைக் கடந்து 113 ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்” – என்றார்.

Comments are closed.