மொட்டு அரசிலிருந்து சு.க. வெளியேறுமா? 21ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த பின்பே தீர்மானம் என்கிறார் தயாசிறி.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் பின்னரே அரசில் எமது வகிபாகம் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

அரசு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆறு யோசனைகள் ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் முன்மொழியப்பட்டுள்ளன. ஜனாதிபதியை நேரில் சந்தித்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவது, அரசுடன் இணைந்து ஒன்றாகப் பயணிப்பது, எதிர்வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது உள்ளிட்ட சில முக்கிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.