இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னும் நீங்கவில்லை! – வீரசேகர கூறுகின்றார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் முயற்சியில் புலத்திலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இங்கிருக்கும் சிலர் துணைபோகின்றனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு இளைஞர்கள் சிலர் நாட்டின் சட்டதிட்டங்களை அறியாது தாம் நினைத்தபடி செயற்படுகின்றனர். அவ்வாறானவர்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு கைதுசெய்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் முயற்சிகளுக்குத் துணைபோகின்றவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

நாட்டில் இன்னொரு இரத்த ஆறு வேண்டாம். வடக்கு, கிழக்கு இளைஞர்களே பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள். உங்கள் இளமைக்காலம் பொன்னானது. அதைச் சுதந்திரமாகக் கழியுங்கள். அதைவிடுத்து பயங்கரவாதச் செயல்களுக்குத் துணைபோய் சிறைகளில் உங்கள் இளமைக்காலத்தைக் கழிக்க வேண்டாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.