புடைவைக் கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய மூவர் கைது! – வாளும் மோட்டார் சைக்கிளும் மீட்பு.

யாழ்., கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில், குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் புடைவைக் கடை ஒன்றுக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகாரச் செயலைச் செய்துள்ளனர்.

இதன்போது கடையில் இருந்த புடைவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடைவைகள் உட்பட பல இலட்சம் ரூபா சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் கைக்கூலிகள் மூலம் செய்யப்பட்டிருக்கலாம் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கடைக்கும் எதிரில் இன்னொரு புடைவைக் கடை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தீ மூட்டப்பட்ட கடை உரிமையாளர் குறைந்த விலைக்குப் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் எதிர்க் கடை வியாபாரியுடன் மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட நிலையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.