இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… 3ஆவது அலையா? – டாக்டர் அனுராக் அகர்வால் விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் ஒருநாள் பாதிப்பு கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தினசரி பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,643 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,56,757 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 464 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,754 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,096 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,15,844 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.39 சதவீதமான உள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 4,14,159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.34 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும், இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 49 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 595 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர். நோயில் இருந்து குணமடைந்து 1,943 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ்

இந்நிலையில், இந்தியாவில் 3ஆவது அலை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று பொதுசுகாதார மருத்துவ நிபுணரும் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனருமான டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.

இது குறித்து அனுராக் அகர்வால் கூறுகையில், “டெல்டா வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டது. 2ஆவது அலை பல மாநிலங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தாமதமாக 2ஆவது அலை தொடங்கியது. கேரளாவிலும் சில மாநிலங்களிலும் 2ஆவது அலை தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. 3ஆவது அலை தாக்குவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.

2ஆவது அலை இன்னும் தொடர்ந்து நீடிக்கலாம். அது இன்னும் பல பகுதிகளில் தாக்குதலை தொடங்கவே இல்லை. அது மேலும் உயர்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு வேளை 3ஆவது அலை உருவாகினால் ஏற்கனவே தாக்கிய முதல் இரண்டு அலைகளையும் விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதிக மருத்துவ வசதிகள் தேவைப்படலாம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.