தொற்றால் வயோதிபர்களே அதிக மரணம்; அரசே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் தேசிய தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டு.

“உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கத் தவறியதனாலேயே, கொரோனா இறப்பு அதிகரித்துள்ளது.”

இவ்வாறு தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குற்றஞ்சாட்டினார்.

எனவே, இதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியமைக்கு அமைய சுகாதார அமைச்சோ அல்லது அரசோ செயற்படவில்லை.

அதற்குப் பதிலாக அரசு 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியது.

நாட்டில் தினசரி 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் இறந்தும் வருகின்றனர். சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாமையே இதற்குக் காரணம். இதனாலேயே இறப்பு அதிகரித்துள்ளது” – என்றார்.

இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்துள்ள 5 ஆயிரத்து 111 பேரில் 74.99 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.