மந்திரவாதிக்கு மாந்திரீகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்ட அழியும் விளிம்பில் உள்ள தேவாங்குகள்

மாந்திரீகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்ட அழியும் விளிம்பில் உள்ள அரியவகை பாலூட்டியான 5 தேவாங்குகள்விளாத்திகுளம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மந்திரவாதிக்கு மாந்திரீகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்ட அழியும் விளிம்பில் உள்ள அரியவகை பாலூட்டியான 5 தேவாங்குகளை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வந்த கனகராஜ், கொம்புத்துறை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

இரவில் இரை தேடும் சிறு பாலூட்டி வகை விலங்கு தேவாங்கு. இது பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள மழைவளக்காடுகளில் உள்ள மரங்களுக்கு இடையே வாழ்ந்து வருகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துறையில் அதிக அளவில் பயன்படுகிறது என்று சொல்லப்பட்டு, அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. தேவாங்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தொழுநோயை போக்குவதாகச் சொல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

தேவாங்கை ஊக்க மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.தேவாங்குக்கு அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏக கிராக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், தேவாங்கு வேட்டையாடப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான குருவார்பட்டியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுரையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி ஒரு சுமோ வந்து கொண்டிருந்தது, அந்த வாகனத்தை சோதனை செய்த போது ஒரு கூண்டில் அழியும் விளிம்பில் உள்ள அரியவகை பாலூட்டி வகையை சேர்ந்த உயிரினமான 5 தேவாங்குகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவாங்கு வனவிலங்கை கடத்திய விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரின் மகன் கனகராஜ் (22) மற்றும் வேம்பார் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கொம்புத்துறை (40) ஆகியோரை கைது செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய சுமோ வாகனத்தையும், 5 தேவாங்குகள் விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு மந்திரவாதிக்கு மாந்திரீகம் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.மாந்திரீகத்தால் ஒருவரை பில்லி சூனியம் வைத்துக் கொல்வதற்கு, ஒரு நபரை மாந்திரீகத்தால் கொல்லுவதற்கு அந்த நபரை நினைத்து, தேவாங்கு பூஜைசெய்து அதைக் கொன்றால், அந்த நபர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கையில் கடத்தப்படுவதாவும், மேலும் அதைக் கொன்று ஆண்மை உணர்ச்சி அதிகரிக்க மருந்து செய்வதற்கும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

5 தேவாங்குகளை கடத்திய கனகராஜ், கொம்புத்துறை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சுமோ வாகனம் ஆகியவற்றை விளாத்திகுளம் நீதிமன்றத்தில் வனச்சரக அதிகாரிகள் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பின்பு 5 தேவாங்குகள் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.