ராகுல், இஷான் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரது அபார ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 49 ரன்களையும், மொயீன் அலி 43 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் – இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிக்க, மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்ந்தது.
அதன்பின் கேஎல் ராகுல் 50 ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் 70 ரன்களைக் கடந்த இஷான் கிஷான் ரிட்டையர் ஹர்ட் முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் – ஹர்திக் பாண்டியா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.