மக்களின் வயிற்றில் அடிக்க ஆட்சிப்பீடம் ஏறவில்லை கோட்டா அரசு!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மக்களின் துயர் துடைக்கவே ஆட்சிப்பீடம் ஏறியது. மக்களின் வயிற்றில் அடிப்பது இந்த அரசின் நோக்கமல்ல.”

இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்று கேள்விக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பாரிய பிரச்சினையாக மாறிவிடும். டீசலின் விலையை அதிகரித்தால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் துயர் துடைக்கவே நாம் ஆட்சிப்பீடம் ஏறினோம். மக்களின் வயிற்றில் அடிப்பது எமது நோக்கமல்ல. எதிரணியினரின் ஆசைகள் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.