பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் தீயில் கருகியது.

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இளம் தாய், அவரது 4,1 வயதான பிள்ளைகள், பாட்டி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.
தீயணைப்பு படையினர் பகீரத பிரயத்தனப்பட்ட போதும், வீட்டிலிருந்த 4 பேரை காப்பாற்ற முடியவில்லை. உயிரழந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பித்தார். அவர் கால்கள் உடைந்துள்ளன.

தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பின.

உயிர் தப்பிய கணவன் யோகன் என அழைக்கப்படுகிறார்.
சுமார் 3 மாதங்களின் முன்னர்தான் 425,000 பவுண்டுகளிற்கு அந்த வீட்டை அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில், யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவரது மனைவியின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தார். இதற்காக மாடியில், அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.
எனினும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கருகிய வீட்டிற்கு வெளியில் இன்று கண்ணீருடன் கூடியிருந்தனர். அந்த பகுதி மக்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.