பாக்ஸிங் டே டெஸ்ட்: ராகுல் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா.

தென் ஆப்பிரிக்கா – இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைந்தது.

மேலும் இருவரும் அரைசதமும் கடந்தனர். அதன்பின் 60 ரன்களைச் சேர்த்திருந்த மயங்க் அகர்வால் இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய புஜாரா சந்தித்த முதல் பந்திலேயே பீட்டர்சன்னிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தார்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவருடன் இணைந்து விளையாடிவரும் ரஹானே 40 ரன்களை எடுத்து அரைசதம் நோக்கி நகர்ந்து வருகிறார். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 272 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 122 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.