தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப் பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
அதேபோல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல், ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் மற்ற மாநிலங்களை போன்று இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, கடைகளின் நேரத்தை குறைப்பது, கோவில்களில் கட்டுப்பாடு விதிப்பது, சுற்றுத்தலா தளங்களில் முறையான வழிக்காட்டுதல்களை பின்பற்றுவது உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.