புலிகளுக்கு முடிவுகட்டினார் மஹிந்த; கொரோனாவைத் தடுத்தார் கோட்டா இப்படிக் கூறுகின்றார் ஜோன்ஸ்டன்

“தோற்கடிக்கவே முடியாது எனக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.”

– இவ்வாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வு இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரஜரட்ட (அநுராதபுரம்) என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015இல் எமக்குத் தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றி பெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை.

பிரபாகரனைத் தோற்கடிக்க முடியாது, புலிகள் அமைப்பு பலம் மிக்கது என அன்று தெரிவித்தனர். ஆனால், அந்த அமைப்புக்கு மூன்றரை வருடங்களில் முடிவுகட்டிய தலைவர்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. எமது ஜனாதிபதி துவண்டுவிடவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்தார். எனவே, இவ்விரு தலைவர்களும் உலக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.