சாப்பாட்டால் சபையில் சண்டை ஏற்படவில்லை ஆளுங்கட்சி தெரிவிப்பு.

“நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் கோரி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேயாட்டம் ஆடினர் என பத்திரிகைகளிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை. இப்படியான சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே. இது தொடர்பில் விசாரணை நடத்தி, போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி மேற்படி கோரிக்கையை ஜயந்த கெட்டகொட எம்.பி. முன்வைத்தார்.

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை மூடினால், எங்களுக்கு வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து சாப்பிடலாம் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,

“தவறான செய்தி வெளியானதையிட்டு கவலை அடைகின்றேன். ஊடக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது. இப்பிரச்சினை சிறப்புரிமைக்குழுவுக்கு வழங்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.