வாக்குறுதிகள் காற்றில் பறந்ததை சம்பந்தன் மறந்துவிடவே முடியாது! ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் ஸ்ரீகாந்தா கருத்து.

“பௌத்த – சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது. சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள்
காற்றில் பறக்கவிடப்பட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று நிகழ்ந்த உயர்மட்ட பேச்சுகளில், அரச தரப்பால் மேலோட்டமான முறையில் வாக்குறுதிகள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் அரசின் சார்பில் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் சகல அத்துமீறல்களும் அடாவடி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படாத வரையில், இந்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

அத்துடன், அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதிலும், நீண்ட பல வருடங்களாகச் சிறைக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, காலதாமதம் செய்யாமல் விரைவாக விடுவிப்பதிலும் அரசுக்கு எந்தத் தடையும் இருக்க முடியாது.

இந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அரசிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் தனது வாக்குறுதிகளின் விடயத்தில் அரசு தன்னைத்தானே நிரூபித்தாக வேண்டும்.

காலத்துக்குக் காலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமது உடனடி அரசியல்.தேவைகளுக்காக வழங்கிச் சென்ற வாக்குறுதிகள் எல்லாம் தமிழர் மனங்களில் இப்பொழுதும் பசுமையாகவே உள்ளன.

1977இல், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் இருந்து 40 வருடங்கள் கழித்து சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் வரையில், தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளுக்கு சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள்
காற்றில் பறக்கவிடப்பட்டதைக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட உரிமை கோரும் தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இந்தியாவின் உதவியும், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளின் ஆதரவும் அவசரமாகத் தேவைப்படும் இக்கட்டான இந்த நேரத்தில், தமிழர்களைத்தான் அனுசரித்துப் போவதான ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுவதற்கு அது முயற்சிக்கின்றது என்பது தெட்டத்தெளிவானது.

தமது பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது.

காணமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் விவகாரத்தில், இந்த அரசு எதுவும் செய்யமாட்டாது. அப்படிச் செய்வதாக, இருந்தால் தமக்குத் தாமே படுகுழி தோண்டுவதாகவே அது இருக்கும் என்பதும் அரச தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் காசைத் தந்து, கண்ணீர் விடும் உறவுகளின் வாய்களை மூட வைக்கலாம் என்ற முட்டாள்த்தனமான சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.

இந்தநிலைமையில், தமக்குள் பரஸ்பர விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் தமிழர் தரப்பு தவிர்த்துக்கொண்டு, இன்றைய சூழ்நிலையை இனி எப்படி பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

விசுவாசத்துடன் சொல்வதானால், அடுத்தகட்ட பேச்சு என்பது நடக்குமாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தபோது உத்தியோகபூர்வமாக தனக்கு வழங்கப்பட்டு, இப்பொழுதும் அரசின் தயவில்தான் தொடர்ந்து வசித்து வரும் ஆடம்பர அரச மாளிகையை மீண்டும் அரசிடம் கையளித்து விட்டு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு தரப்பட வேண்டிய அரச குடியிருப்புத் தொகுதி வீடு ஒன்றிலிருந்து, அந்தப் பேச்சில் கலந்துகொள்ள சம்பந்தன் வர முடியுமாக இருந்தால், பேச்சு மேசையில் அவரின் ஆக்ரோசக் குரலுக்குப் பல மடங்கு பலம் சேரும்.

ஏற்கனவே, பேச்சில் கலந்துகொள்ள நிபந்தனை விதிக்கப்பட வேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாடு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும் அதன் ஏனைய இரண்டு கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ரெலோ ஒதுங்கி நின்றதன் மூலம், பேச்சு மேசையில் சம்பந்தனின் குரலுக்கு எதிர்மறையான முறையில் வலுச் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்” – தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.